Monday, December 14, 2009

புகைப்படங்கள்








































































































Friday, November 27, 2009

தந்தை மகற்கு ஆற்றும்....

காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக மட்டுமே நான் இதுவரை அறிந்து வந்துள்ளேன். அவருக்கும் பிள்ளைகள் உண்டு, ஒன்றல்ல நான்கு என்பதை இதுவரை எங்கும் கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவில் இல்லை. ஒரு சராசரி தந்தையாக அவரின் செயல் மற்றும் ஆளுமை ஜெயமோகன் அவர்களின் இந்த இரண்டு கட்டுரைகளால் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

http://jeyamohan.in/?p=5013

http://jeyamohan.in/?p=5040

ஆங்காங்கே தமிழின தலைவர் கலைஞரின் பிம்பம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

சற்று பெரிய கட்டுரைகள், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும்.

Monday, November 16, 2009

சென்னை - 2

எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லரிப்பா போச்சு.

நேற்று தான் சென்னையில் என்னுடைய பத்து வருடங்கள் பற்றி ஒரு பதிவினை போட்டு வைத்திருந்தேன், இன்று என் அலுவலகத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.....

இன்றைக்கு அலுவலகத்தில் என்னுடைய அணியில் ஒருவர்(விஜய்) புதியதாக சேர்ந்தார். அவரை எனக்கு அறிமுகபடுத்த HRடீமில் இருந்து அழைத்தார்கள். நானும் சென்றேன். அங்கே இரண்டு புதியவர்களும் HRரும் நின்று கொண்டிருந்தார்கள். புதியவர்களில் ஒருவரை அரைகண்ணால் பார்த்தபடியே HRரிடம் இவர்தானா விஜய் என்று கேட்டேன், அவர்கள் இல்லை மற்றொருவர் என்று கூற நானும் அவரை அழைத்துக்கொண்டு என் இருப்பிடம் வந்துவிட்டேன்.
புதியவருக்கு அலுவலகம் மற்றும் பணிகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன், சற்று தொலைவில் இருந்து என்மேல் இரண்டு கண்கள் ஊறுவதை உணர்ந்து திரும்பி பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன் நான் இவரா விஜய் என்று கேட்ட நபர் என்னையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். ஒரு ஐந்து வினாடிகள் அவரை உற்று பார்த்தவுடன் என் உடம்பில் ஒரு வினாடி மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது. செந்தில் அண்ணன். சென்னையில் கழித்த பத்து வருடங்களில் முதல் மூன்று வருடங்கள் என்னுடைய அறையில் இருந்தவர். இம்மாநகரில் எனக்கு கிடைத்த முதல் சில அறிமுகங்களில் அடங்குபவர்.

எவ்வளவு துன்பங்கள், கடினங்களை எதிர் கொண்டாலும் சிரித்த முகத்துடன் இருப்பவர். பணி நிமித்தமாக பெங்களுருக்கு குடி பெயர்ந்தார், அதன் பிறகு அவருடனான தொடர்பு முற்றிலுமாக அறுபட்டது. பலமுறை நினைத்தும் விடாத முயற்சி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

அதே புன்சிரிப்பு மாறாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்" - அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!

இன்று அவருடன் சென்று குடித்த தேநீர் வழக்கத்தை விட நன்றாக இருப்பதாகப்பட்டது.

2012 - உலகம் அழியுமா?

2012-ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, மனித இனம் விரைவில் அழியப்போவது என்னமோ உண்மை.

http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=117&Itemid=9

பணம் கொண்டு இயற்கையினை வளைக்க முடியாதென்பதை மானுடன் உணரும் வரை ஒன்றும் செய்ய முடியாது.

Sunday, November 15, 2009

சென்னை - 1

நேற்று நடந்தது போல் இருக்கிறது. 08th Aug'1999, மின்னணு பொறியியல் படிப்பதற்காக பிறந்து வளர்ந்த ஊரை விட்டு சென்னை வந்து 50 லட்ச மக்கள் வெள்ளத்தில் கலந்து கரைந்த தினம். பத்து வருடங்கள் ஓடி விட்டன.

வழியனுப்ப வாசல் வரை வந்த பாட்டி, அம்மா, சித்தப்பா, சித்தி, அக்கா அனைவரையும் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் ஏற்கனவே அக்காவும், அண்ணனும் வெளியூர் சென்று விடுதியில் தங்கி படித்து வருகின்றனர், அப்படி செல்லும் போது அவர்கள் யாரும் அழுதது இல்லை. சென்னை வெறும் ஐந்து மணி நேர பயணமென்பதாலும், என் அத்தை அங்கே வசிப்பதாலும், தந்தை தொழில்ரீதியாக பல வருடங்களாக வாரமொருமுறை சென்னை விஜயம் செய்தவராததாலும் யாருக்கும் நான் சென்னை செல்வது குறித்து அவ்வளவாக பயமில்லை. எனக்கோ மிரட்சியாக இருந்தது, மதியம் சாப்பிட்ட பிரியாணி செரிக்காமல் தொண்டைவரை வந்து வந்து சென்றுகொண்டிருந்தது.

என் அழுகையினை எதிர்பார்க்காத அனைவரும் சிரித்துவிட்டனர். ஏன் அழுதேன் என்று இப்போது நினைத்து பார்த்தால் எனக்கும் சிரிப்புதான் வருகிறது.

சைதாப்பேட்டை - சென்னையின் வளைவு சுழிவுகளை எனக்கு கற்று கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கின்ற இடம். பத்து வருடங்களில் எட்டு வருடங்களை இங்கே தான் கழித்தேன். ஒத்தையடி பாதை போல சுருக்கப்பட்ட தெருக்கள், அவற்றிலிருந்து கிளைபரப்பும் சந்துக்கள், தெருவிற்கு தெரு உள்ள கோவில்கள், Boat Club, அண்ணா நகர், பெசன்ட் நகர், அடையார் போன்று தனவாங்கள் மட்டுமே வாழும் இடமாக அல்லாமல் வறுமை கோட்டிற்கு மேலும், கீழும், மீதும் பயணம் செய்யும் அத்தனை மக்களையும் கொண்ட அழகிய அசுத்த இடம்.

இந்த பத்து வருடங்களில் சென்னையில் எனக்கு பிடித்த இடங்கள், மக்கள், உணவு விடுதிகள் மற்றும் சிலவற்றை பதிவு செய்யத்தோன்றியது. அதற்கு என் படித்துறையை விட வேறு நல்ல இடமேது?.

வரும் நாட்களில் அதனை செய்யலாமென்று உத்தேசித்துள்ளேன்....

சச்சின் மட்டும் தான் 20 வருடங்கள் கொண்டாடுவாரா??? நாங்களும் தான்...

Monday, November 09, 2009

கூட்டாஞ்சோறு - 09/11/09


வெள்ளந்தி மனசு
என் தந்தை பால் வியாபாரம் செய்து வருகிறார். குடியாத்தத்திற்கு அருகிலுள்ள கிராமங்களிற்கு சென்று விவசாயிகளின் பசுக்களில் பால் கறந்துவர 4/5 பணியாட்கள் இருப்பார்கள். அதில் ஒருவரின் பணி காலையிலும் மாலையிலும் மணிக்கொரு முறை சென்று அந்நேரத்தில் அவர்களிடம் உள்ள பாலினை சேகரித்து வருவது. என்னுடைய பள்ளி நாட்களில் வேலையாட்கள் யாரவது விடுமுறையில் சென்றால் நானோ அல்லது என் அண்ணன்னோ பாலினை சேகரித்து வர செல்வோம். அப்படி ஒருமுறை செல்கையில், மூங்கில்பட்டு கிராமத்தில் ஒரு வரப்பு ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்து குபேந்திரன்(பணியாள்) பால் கறந்துவர காத்திருந்தேன், என்னருகில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வந்து அமர்ந்து உள்ளூர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையில் கரும்பு சோகை கட்டும், இடுப்பில் வெட்டரிவாளும் கொண்டு எங்களை கடந்து சென்றாள். வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தவர்களை கண்ட அவர் அந்த இருவரில் ஒருவரைப்பார்த்து உரக்கச்சொன்னார்:

என்ன, மருமவ புள்ள இப்படி வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தா, உன்னைய நம்பி எப்பிடி எம்பொண்ண குடுக்கறது?

மொதல்ல நீ பொண்ண பெத்துப்போடு அப்புறம் பாரு நான் எப்படி துட்டு சேக்குறேன்னு..

உன்னைய நம்பி நான் பொண்ண வேற பெத்து போடனுமாக்கும், போய் பொழப்ப பாரு மொதல்ல..

இவ்வாறு சொல்லிக்கொண்டே அந்தப்பெண் சென்றுவிட்டார், இருவரும் தங்கள் பேச்சினை தொடர்ந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அந்தப்பெண் பதில் கூறிய இளைஞசனின் தெருவில் வசிப்பவர், மேட்டு ரவியின் மனைவி என்று தெரிந்தது.

ஏனென்று தெரியவில்லை, அந்த சம்பாஷனை நடந்து பல வருடங்கள் ஆகியும் என் நினைவில் அப்படியே படிந்துள்ளது.

கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனசினை இந்த சம்பவத்தில் நாம் சிறிது தெரிந்து கொள்ளலாம். தான் வாழ வந்த ஊரில் ஒருவன் வெட்டியாய் இருப்பதை பார்த்து தனக்கென்ன என்று போகாமல் உரிமையுடனும், நாசுக்க்காகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லிய வார்த்தைகள் சென்னை போன்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கைவருமா அல்லது இவ்வாறு பிறர் தடம் மாறும்போது உரிமை கொண்டு சொல்வார்களா என்பது சந்தேகமே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நகரம்
நான் இதுவரை படித்திருக்கும் சில பத்து புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்". இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில் உள்ள பல கதைகளை நான் திரும்ப திரும்ப பலமுறை படித்துள்ளேன். அதில் ஒரு கதை "நகரம்".

மூனாண்டிப்பட்டியினை சேர்ந்த வள்ளியம்மாள் தன்னுடைய மகள் பாப்பாத்தியினை கிராம பிரைமரி ஹெல்த் சென்டர் டாக்டரின் அறிவுரைப்படி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும், மருத்துவ வாடைகளும் அதனால் ஏற்படும் விளைவுமே கதை.

என்னை இதுவரை பாதித்த கதைகளுள் முக்கியமான ஒன்று இது.

உங்களிடம் பதினைந்து நிமிடங்களும், கதை படிக்கும் மனநிலையும் இருந்தால் இந்த link'ல் சென்று கண்டிப்பாக படிக்கவும்:

http://www.scribd.com/doc/2582483/sujatha
-

Wednesday, September 09, 2009

ஹலோ சூரியன் F.M

ரொம்ப நாளாக F.Mக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.


ஹலோ சூரியன் F.M

ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

சூரியன் F.M தாங்க.

அப்படியா? நான் சூரியன் I.P.S ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

புறாக் கூடு போல முப்பது ரூமு..

ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

அப்படியில்ல சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

நான் ரெடி.

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

மந்திரா

மந்திரா பேடியா?

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது.

சார், இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல யார புடிக்கும்?

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

சார், ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

யாரு சார் அது பக்கத்துல?

ஆறு.

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

அதான் ஆறு.

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.

அடுத்த ரவுண்ட் ஜி.கே

B.K தெரியும். அது என்ன G.K.?

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

அப்படி ஒரு சரக்கா?

டொக்

நண்பனொருவன் மின்னஞ்சலில் அனுப்பியது.

Tuesday, September 08, 2009

பிழைக்க தெரியாத மனுசன்

" என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன்.

கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?" - திரு.நல்லகண்ணு.


60 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார். மாதம் 3,500 ரூபாய் வாடகையில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஜாகை. பிழைக்க தெரியாத மனுசனா இருப்பாரு போல.


கொசுறு :

"தமிழக அரசு சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு மனை வீதம் சென்னை சோழங்கநல்லூர் அருகில் அரசு நிர்ணய விலையில் வீடு கட்ட ஒதுக்கி தரவேண்டும்" - வேலூர் M.L.A ஞானசேகரன்.

"ஓ, அதற்கென்ன பேஷா செய்துட்டா போச்சு" - கலைஞர்

Friday, August 21, 2009

யோவ், நான் யோக்கியன்யா!!!

10 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பினேன், வாஷிங்டன் D.C'யிலிருந்து லண்டன் வழியாக சென்னை பயணம். D.C'யில் security check'ர்க்காக வரிசையில் காத்திருந்த பொழுது எனக்கு ஐந்து நபர்களுக்கு முன்பாக அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் நின்றுக்கொண்டிருந்தார். அவரருகில் ஒரு வாலிபனும் அவர் இளம் மனைவியும் நின்றுகொண்டு பெரியவருடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் மூவரும் என்னருகில் வந்தார்கள், வாலிபன் கேட்டான்:

excuse me
yes
are you going to Chennai?
yes
cool, he is my father
oh..hello sir
hi
he is also going to Chennai, we are not travelling, he is going alone, will you be able to help him during the transit in London and also in flights?
உங்க அப்பாவுக்கு தமிழ் தெரியுமா?
yes, he knows
கவலை வேண்டாம், நான் உதவுகிறேன்
thank you very much.

பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் ஏறுவதற்கு முன் இருவரும் பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். எட்டு மணி நேர பயணத்திற்கு பிறகு லண்டன் வந்து சேர்ந்தோம். சென்னை விமானம் அடுத்த நான்கு மணி நேரத்தில். அமெரிக்க கிளம்பும் போதே உடன் பணிபுரியும் நண்பன் சென்னை திரும்பும் பொழுது அயல்நாட்டு சரக்கோடு தான் திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான்.

லண்டன் விமான நிலைய Duty free கடையில் அவனுக்கானதை வாங்க வேண்டும் என்பது என்னுடைய திட்டம். எதிர்பாரத விதமாக இந்த பெரியவர் என்னுடன் வந்து ஒட்டிக்கொண்டதால் அவரிடம்(மரியாதை காரணமாக) நான் சரக்கு வாங்க வேண்டும் அதற்கான கடைக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல தயங்கி ஒரு இடத்தில அவரை அமர செய்து சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறி சென்றேன். Duty free கடையில் இரண்டு பாட்டில்கள் வாங்கி திரும்பினேன். வந்த என்னிடம் சரக்கு பாட்டில்கள் இருப்பதை கவனித்த பெரியவர் கேட்டார்,

என்ன தம்பி சரக்கு வாங்கவா போயிருந்தீங்க?

(தயங்கியபடி) ஆமாங்க

அடடா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல்யிருக்ககூடாது, நானும் வந்து இருப்பேன்ல, நானும் உங்களை மாதிரி ஒரு குடிகாரன் தான்

என்னது குடிகாரனா!!!! ஹலோ பெரியவரே, எனக்கு குடிபழக்கம் கிடையாது , நான் யோக்கியன்

யோக்கியனா, யோக்கியனுக்கு சாராய கடையில என்ன வேலை?

இது ஏன் நண்பனுக்காக வாங்கினது

இப்படி தான் பலபேர் சொல்லிக்கிட்டு திரியறானுங்க, எந்த குடிகாரன் தன்னை ஒரு குடிகாரன்னு ஒத்துக்குறான்?

நம்புங்க எனக்கு குடி பழக்கம் கிடையாதுங்க...

சரி சரி வாங்க கடைக்கு போகலாம், எனக்கு சரக்கு வாங்கணும்

ஹலோ சார், நம்புங்க நான் குடிகாரன் இல்லை, சத்தியமா இது என் நண்பனுக்கு தான், ஹலோ சார்....

ஹூம்ம்ம்... எனக்கு செவி சாய்க்காதவராக கடையினை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

Tuesday, August 18, 2009

கவிதை - 2

சிலுவையினை கழுவு
ஆணிகளை கூர்படுத்து
முள் கிரீடம் அவசியம்
சாட்டை தயாரா?
இயேசு மீண்டு(ம்) வருகிறார்.

கவிதை - 1

இயேசு நாதர்
சிலுவையில்
போப் ஆண்டவரோ
bullet proof'ல்

Friday, July 31, 2009

பேசும் படம்

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY

சாருவின் வலைத்தளத்தில் அறிமுகமானது...

Thursday, July 30, 2009

டாலர் தேசம்























Tuesday, July 28, 2009

யாரப்பாத்து பொண்ணுன்னு சொன்ன...

என்னுடைய தந்தை வழி தாத்தாவை நான் போட்டோவில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பை பெற்றவன். தாய் வழி தாத்தா சிறுவயதில் ஒரு ஹிட்லராகவே எனக்கு தெரிந்தார்.

டில்லி தாத்தா, தந்தை வழி தாத்தாவின் தங்கையின்("சைதாபேட்டை அத்தை", பாட்டி என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நாங்கள் சைதாபேட்டை அத்தை என்று தான் அழைப்போம்) கணவர்.சென்னை தீயனைப்பு துறையின் ஓட்டுனர் மற்றும் வாகன பழுது பார்க்கும் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

1970களிலேயே நான்கைந்துமுறை தீயனைப்பு வண்டிகளை சென்னையிலிருந்து டில்லிவரை ஓட்டிச்சென்று வந்தவர். டில்லி தாத்தாதான் என் பால்யப்பருவ ஆதர்சன ஹீரோ.

ஒவ்வொரு முறை அவர் டில்லி சென்று வரும்போதும், தாத்தா அலாவுதீனின் கன்னி தீவிற்கு சென்று வந்ததை போல உணர்வோம். இரவு தூங்கும்முன் தன்னுடைய பயண அனுபவங்களை கதைகளாக எங்களுக்கு சொல்லுவார்.
எங்கள் குடும்பத்தில் யாரும் அதுவரை தமிழ் நாடு எல்லையைக்கூட தாண்டியது கிடையாததால் பொடிசுகளான நாங்கள் எல்லோரும் அவரை "டில்லி தாத்தா" என்று அழைக்க, செல்வராஜ் என்ற பெயர் டில்லி தாத்தா ஆனது.

டில்லி தாத்தா என்னை தன் சொந்த பேரனாகவும், என் அப்பாவை மகனாக கருதுபவர். அப்பாவை எப்பொழுதும் 'பையா' என்று தான் அழைப்பார். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கோடை விடுமுறைக்கு கண்டிப்பாக சென்னை சைதாபேட்டையிலுள்ள டில்லி தாத்தா வீட்டிற்கு செல்வோம். கிண்டியில் நேரு மாமா கையிலிருக்கும் புறாவை பேருந்திலிருந்து பார்த்தவுடன் மனசில் பட்டாம்பூச்சிகள் பறக்கும்.

இந்த சம்பவம் நடக்கும் பொழுது எனக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். நாங்கள் சென்றபொழுது தாத்தாவிற்கு சென்னை தீவுத்திடலில் நடக்கும் அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தீயணைப்பு நிலையத்தில் பணி. அன்று பணிக்கு செல்லும்பொழுது எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருந்தார்.

அதுவரை வெறும் பொம்மை கார், பஸ், ரயில்களை மட்டுமே வைத்து விளையாடிக்கொண்டிருந்த எனக்கு உண்மையான தீயணைப்பு வண்டியினை முதன்முதலில் கண்ணெதிரே பார்த்தவுடன் பெரும் குதுகலமானது. மகிழ்ச்சி எல்லா எல்லைகளையும் கடந்தது. அத்தை, அம்மா, அண்ணன், அக்கா அனைவரும் பொருட்காட்சியினை சுற்றி பார்க்க அழைக்க நானோ தீயணைப்பு வண்டியின் பிரம்மிப்பிலிருந்து அகலாமல் அவர்களுடன் செல்ல மறுத்து தாத்தாவுடனே தற்காலிக தீயணைப்பு நிலையத்தில் தங்கிவிட்டேன்.
அனைவரும் சென்றப்பின் தாத்தா என்னை வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் அமர்த்தினார்(நிற்கவைத்தார்). அவ்வளவுதான், ஓட்டுனர் உரிமம் கிடையாது, பயிற்சி கிடையாது, சாலை விதிகள் பற்றிய கவலைகள் கிடையாது, direct'taaa driverஆகி stearing பிடித்து வண்டியை 200 kmph வேகத்தில் ஓட்டத்தொடங்கினேன்.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... டிங் டிங் டிங் டிங்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...டிங் டிங் டிங் டிங்...

இப்படியாக எந்த சாலை விதிகளுக்கும் கட்டுப்படாமல் என் வண்டி அண்ணா சாலையில் பறந்துக்கொண்டிருந்தது. தாத்தா ஓட்டுனர் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து பேரன் வண்டி ஓட்டும் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடன் பணிபுரியும் மற்றொரு நபர் ஓடும் வண்டியில் ஏறி தாத்தாவின் அருகில் அமர்ந்து உரையாட தொடங்கினார்.

என்னப்பா செல்வராஜ் சாப்பாடு ஆச்சா?

இப்போதான் சாப்பிட்டேன் கணேசா, நீ சாப்பிட்டியா?

ஆச்சுப்பா...

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... பீம்......... பீம்........

என்ன இந்த வருஷமும் இரண்டாவது ஊதிய குழுவோட பரிந்துரைய அமல்படுத்த மாட்டாங்க போல இருக்கு?

பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...... டிங் டிங் டிங்........

அப்படித்தான் தெரியுது, நேத்துதான் secretriatல சண்முகத்த பார்த்தேன், சந்தேகம்னு தான் சொன்னான்.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........டிங் டிங் டிங்........

யாரு குழந்தைப்பா இது.. துரு துருன்னு இருக்கு, கொஞ்சநேரம் அமைதியா இருக்காது போல(அப்பொழுது எனக்கு ஜடை போடும் அளவிற்கு தலையில் முடி இருந்தது. உபயம்: ஏழுமலையான் வேண்டுதல். பார்ப்பதற்கு பெண் குழந்தை போல இருந்திருக்கிறேன்).

என் மகனோட குழந்தைதாம்பா, எல்லோரும் பொருட்காட்சியை பார்க்க போய் இருக்காங்க.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்...

ஆமாம் நானும் பார்த்தேன், அப்படி தான் சொன்னாரு,

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
ம்ம்ம்ம்...

ஒவ்வொரு வருஷமும் ஏதாவது காரணம் சொல்லி தள்ளிகிட்டே போறாங்க. இப்படி இழுத்துகிட்டே போனா பொழப்ப எப்படி ஓட்டுறதுன்னு புரியல செல்வராஜ்.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........டிங் டிங் டிங்........

(இப்பொழுது கணேசன் நான் வண்டி ஓட்டும் சத்தத்தால் கடுப்பாகி சற்று கடுமையுடன் சொன்னார்)
"இந்தா பொண்ணே, ஏன் சும்மா கத்திகிட்டு இருக்க, கொஞ்சநேரம் அமைதியா உட்காரு.. கீழே விழப்போற...."

அவ்வளுதான் எனக்கு கடுமையாக கோபம் வந்து விட்டது, stearing'கை அப்படியே விட்டுவிட்டு அவரை பார்த்து சத்தமாக..

"இன்னா, யாரப்பாத்து பொண்ணுன்னு சொன்ன, நான் பொண்ணு இல்ல, பையன் தெரியுமா, இங்க பாரு எனக்கு !@#$%^& இருக்கு, அஹாங்" என்று சொல்லி டவுசரை அவிழ்த்து காட்டிவிட்டு மீண்டும் சாலை பார்த்து வண்டியை ஓட்ட தொடர்ந்தேன்.

டுர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்ர்.....பீம்......... பீம்........பீம்ம்ம்ம்ம்...பீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

!!!! நாங்கெல்லாம் யாரு தெரியும்ல, ஆம்பளை
சிங்கமாக்கும்!!!

Friday, June 26, 2009

குறுந்தொகை

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"

இந்த குறுந்தொகை பாடலினை(சங்ககால பாடல்) அறியாதவர்கள் தமிழகத்தில் அநேகம். முழுப்பாடலினை இல்லாவிட்டாலும் "செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற வரிகளை நிச்சயம் அறிவர்.


'இருவர்' படத்தினில் தொடங்கி இவ்வரிகளை வைரமுத்து 'சில்லுனு ஒரு காதல்' படம் வரை அங்கங்கே உபயோகித்திருப்பார்.


முதன்முதலில் இவ்வரிகளை 'இருவர்' படத்தில் கேட்டபொழுது அர்த்தம் புரியாவிட்டாலும் மிகவும் ரசித்தேன்.



அவ்வரிகளின் பொருள்தேடி அலைந்தேன். தமிழாசிரியரிடம் கேட்கவும் பயம். பாடத்தில் சந்தேகம் கேட்காமல் படத்திலா கேட்கிறாய் என்று பெண்டு நிமிர்த்திவிட்டால். அர்த்தம் புரியாமலே அந்த வரிகளை மனப்பாடம் செய்து பாடி வந்தேன்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா இதே வரிகளை மேற்க்கோள் காட்டி கவிஞர் மீரா அவர்களின் ஒரு கவிதையினை பற்றி எழுதியிருந்தார். இப்பாடலின் அர்த்தத்தினை எப்படியாவது அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் மீண்டும் என்னுள் துளிர்த்தது. ஆனால் முடியவில்லை, என் நட்பு வட்டம் மிகவும் சிறியது மற்றும் இம்மாதிரி இலக்கியத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதது.

இப்படியாக இருக்கையில் வாலி இதே வரிகளை 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் உபயோகித்திருந்தார்.


இம்முறை விடுவதாக இல்லை. சற்று தீவிரமாக தேடிய பொழுது http://www.tamilvu.org/ வலைதளத்தில் கிடைத்தது.
இப்பாடலின் அர்த்தம் என்னவென்றால்:

"என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ?
என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எப்படி உறவினர்?
நானும் நீயும் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு அறிந்தோம்?
இவ்வாறு எந்த சம்பந்தமும் இல்லாத நம் இருவரின் மனமும்
செம்மண்ணில் நீர் கலந்தால் எப்படி பிரிக்க முடியாதோ
அவ்வாறு இயல்பாக கலந்து விட்டன".

அர்த்தம் புரிந்த பின்பு இந்த பாடல் எனக்கு இன்னும் சுவை தருவதாக இருந்தது.


இன்னா நைனா 'ஆய்'ங்குற, 'ஆந்தை'ங்குற, 'சொம்பு'ங்குற ஒன்னிமே பிரியமாட்டேங்குது இதுக்குதான் உன் blog பக்கம் வர்றதில்ல, ஒரு எழவும் பிரிய மாட்டேங்குதுனு என்னிய திட்டும் தோஸ்துகளுக்கு, இந்த கானா பாட்டு இன்னா சொல்லுதுனா:

Wednesday, June 24, 2009

2 to 2 to 2:2

அன்பே சிவம் படத்தினை பார்த்தவர்களுக்கு இந்த பதிவின் தலைப்பினை படிப்பதில் சிரமமேதும் இருக்காது.

எங்களுடைய ஊரின் பிரதான தொழில்களாக இருப்பவை விவசாயம், கைத்தறி, பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளாகும். நாள் முழுவதும் உழைத்து களைப்பவர்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் களைப்பாருவது திரையரங்குகளில்தான். பெரும்பாலும் திரைப்படத்தினை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்பவர்கள். வீடு, உச்சி வெயில் போன்ற பீரியட் படங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் அரங்கில் தங்காது, அதுவே அதிகம்.

குருதி புனல் வெறும் நான்கு நாட்கள்தான் ஓடியது என்றால் பார்த்து கொள்ளுங்கள். எம்மக்கள் அரங்கில் உட்கார்ந்து யோசிக்கக்கூட யோசிப்பவர்கள். குருதி புனலில் நாசரை ஏன் கொன்று உப்புபோட்டு புதைக்காமல்விட்டார் என்று கேட்டால் பெரும்பாலனோர் விழிப்பார்கள்.

ரஜினி படங்கள் தவறாமல் நூறு நாட்கள் ஓடும்.

"ஹே ராம்" படத்தின் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தியேட்டரில் விஞ்சியிருந்தது பத்து நபர்கள்தான்.

அம்மன் படம் திரையிட்டப்பொழுது லக்ஷ்மி தியேட்டர் வாசலில் ஒரு தற்காலிக அம்மன் கோவில் கட்டப்பட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படியான ஊரில் "அன்பே சிவம்" படம் வெளிவந்தது. நானும் என் அத்தை மகனும்(ஓய்) படம் பார்க்கச்சென்றோம். என் வலப்பக்கம் அவன் அமர்ந்தான், இடப்பக்கம் ஒருவர் உழைத்து களைத்து வந்தமர்ந்தார். படம் ஓடிக்கொண்டிருந்தது, ஆரம்பம் அமர்களமாக இருந்தது, அனைவரும் ரசித்தார்கள், மெல்ல படத்தின் கதை தீவிரமடையத்தொடங்கியது, அந்த காட்சியும் வந்தது. ரயில்வே நிலைய அதிகாரி மாதவனிடம் சென்னை செல்லும் ரயில் அந்த நிலையத்தில் நிற்கும் நேரம் "2 to 2 to 2:2" என்று சொன்னார், முதலில் எங்களுக்கும் கமல் & மாதவனைப்போல புரியவில்லை, ரயில்வே மாஸ்டர் திரும்பவும் சொன்னார், கமலுக்கு புரிந்தது, மாதவனுக்கும், எங்களுக்கும் புரியவில்லை. இப்போது கமல் விளக்கினார் மாதவனுக்கும், எனக்கும் புரிந்தது. மாதவன் கடுப்பானார், நான் சிரித்தேன், தியேட்டரில் ஒருசிலர் சிரித்தனர், 'ஓய்'க்கு புரியவில்லை.



'ஓய்'க்கு விளக்கிக்கூறினேன், அவனும் ரசித்து சிரித்தான். மற்றொருவருக்கு புரியவில்லை என்பதையும் அவர் எங்களை கவனித்துக்கொண்டிருந்தார் என்பதையும் நான் அறியவில்லை.

என்னிடம் கேட்கத்தயங்கியவர் கமலின் மேல் கடுப்பாகி எழுந்து நின்று தியேட்டரில் உள்ள அனைவரும் கேட்கும்படி உரக்க "ங்கோத்தா, இதுக்குதான் இவன் படத்துக்கு வர்றதுஇல்ல, ஒரு எழவும் புரிய மாட்டேங்குது" என்று கத்திவிட்டு தியேட்டரின் வெளிவாசல் நோக்கி வேகமாக சென்றுவிட்டார்.

Sunday, June 14, 2009

Do you need a lift??

பணி நிமித்தமாக மீண்டும் ஒருமுறை டாலர் தேசத்திற்கு 60 நாள் பயணமாக வந்துள்ளேன். உடன் வந்துள்ள நண்பர், ஆறுமுகம்.. அறுபது நாட்களும் ஹோட்டல் வாசம். இருவருக்கும் சமையல் செய்யும் வசதியுடன் கூடிய தனித்தனி சிறிய அறை. இந்தியாவிலிருந்து வரும்போது பெரும்பாலான சமையல் பொருட்களை கொண்டு வந்து இருந்தோம். வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகளை அங்குள்ள கடையில் சென்றுதான் வாங்க வேண்டும்.
ஹோட்டலிலிருந்து பல்பொருள் அங்காடி 0.5 மைல் தூரமே. அலுவலகம் முடிந்ததும் ஆங்கிலேய நண்பர் ஒருவர் தன்னுடைய காரில் எங்களை கடையில் கொண்டு விட்டுச்சென்றார். பொருட்களை வாங்கி வெளியே வரும்பொழுது நல்ல மழை, கையில் குடையும் இல்லை, call taxiயினை கூப்பிட mobile இல்லை. பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் கவர்களை கையில் பிடித்தப்படி மழை நிற்க காத்திருந்தோம்.

மழை விடுவதாக இல்லை, விடாமல் நாங்களும் நகர்வதாக இல்லை. கடை வாசலிலேயே காத்திருந்தோம். ஒரு வெள்ளை நிற Honda City வந்து நின்றது. 60 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞ்சர் குடையுடன் இறங்கி கடை நோக்கி வந்தார். வடஇந்தியர்.

எங்களை கண்டவுடன் ஒரு புன்னகையினை உதிர்ந்தார், பதிலுக்கு நாங்களும். அருகில் வந்தவர் நாங்கள் மழைக்காக ஒதுங்க்கியிருப்பதை உணர்ந்தார். எங்களுடைய பூர்வீகம், அமெரிக்கா வந்திருப்பதின் நோக்கம் முதலியவற்றினை கேட்டறிந்தார், நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் உட்பட.

மழை தொடர்ந்து பூமியினை ஆசிர்வதித்து கொண்டிருந்தது. பெரியவர் தற்பொழுது ஹோட்டல் இருக்கும் தூரத்தினையும், வழியினை பற்றியும் விசாரித்துக்கொண்டிருந்தார், அவர் எங்களுக்கு உதவ முனைகிறார் என்பதை உணர்ந்த எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி உருகொண்டது, தானாக முன்வந்து உதவ முனைபவரை காண பெருமையாகவும் இருந்தது.
எல்ல கேள்விகளுக்கும் எங்களிடமிருந்து பதிலை பெற்றுக்கொண்டவர் கேட்டார்;

The hotel is very close from here, right?

Yes sir, it is just half a mile from here, but since it is raining we are not able to go, waiting for it to stop.

Oh, I got you, I have a better idea.

Tell us sir? :-)

You both go inside the shop and ask for additional plastic covers. They will definetly give. Put it on your head and walk to the hotel. Your head won't get wet, it will be easy to walk in the rain with cover on head.

!@#$%^&*(), Thank you very much sir, we are also thinking about the same only.

That's good, have a good day kids. bye.

Thank you sir, you too, take care, see you, bye...

Tuesday, June 02, 2009

காந்தியும் பிரபாகரனும்

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1461

Monday, June 01, 2009

படித்ததில் பிடித்தது - 2


'வாய்யா நீலகண்டா!
M.G.ராமச்சந்திரனை சுட்டேன்.
அவனும் சாவலை.
என்னை சுட்டுக்கிட்டேன்.
நானும் சாவலை.
என்னய்யா துப்பாக்கி
கண்டுப்புடிச்சிருக்கானுங்க?
இதை வெச்சுகிட்டுத்தான்
சீனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?'

- டைரக்டர் ப.நீலகண்டனிடம் எம்.ஆர்.ராதா

புத்தகம் - M.R.ராதாயணம், கிழக்கு பதிப்பகம்

Sunday, May 31, 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் "கேள்விக்குறி" புத்தகத்தை படித்தேன். அவரதில் ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்வின் பல சமயங்களில் கேட்கும்/எதிர்கொள்ளும் கேள்விகளான "என்னை எதற்கு படிக்க வைத்தீர்கள்?", "ஏன் என்னை யாரும் புரிந்துகொள்ள மாட்டேங்குறாங்க?", "உன்னால ஒரு வேளை சாப்பாடு போட முடியுமா?" போன்றவற்றினை பற்றி எழுதியிருந்தார். ஆசிரியரின் கூற்றுப்படி இம்மாதிரியான கேள்விகளை கடந்து செல்லாதவர்கள் இருக்க முடியாது. அது உண்மையும் கூட.

படித்து முடித்து புத்தகத்தினை மூடினேன், என்னுளிருந்த இது போன்ற பல விடை தெரியா கேள்விகள் தானாக திறந்துக்கொண்டன. அதிலொன்று, "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?". நான் இந்த கேள்வியினை பல சமயம் எனக்குளாகவும் சுற்றத்திடமும் கேட்டிருக்கிறேன். இந்த கேள்வி என்முன் வந்து நிற்கும் தருணம் பெரும்பாலும் சின்னத்திரை வசதி கொண்ட பேருந்தில் பயணம் செய்யும் தருணமாக இருக்கும். அதற்கு காரணம் நான் பயணம் செய்யும் பொழுது திரையிடப்படும் படங்கள் மொக்கை படங்களாகவே இருப்பது தான். இதுவரை ஒரு நல்ல படத்தினை நான் பயணத்தின் பொழுது பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.

இறங்கி ஓடவும் முடியாமல், படத்தினை நிறுத்த சொல்லவும் முடியாமல் செல்லும் அந்த நிமிடங்கள் நான் அடிக்கடி சந்திக்கும் நரகங்கள். துரை, வில்லு, வானத்தை போல, ஆணழகன், நரசிம்மா என்பதாக இந்த பட்டியல் நீளும். வானத்தை போலவின் "லாலா ல லாலா லாலா லாலல்லலா....." வீச்சினை தாங்க முடியாமல் ஒருமுறை காரைக்குடியிலிருந்து வரும்பொழுது பேருந்திலிருந்து வெளியே குதித்தோடிய கதையெல்லாம் உண்டு. இவற்றுள் "வில்லு" படத்தின் அனுபவம் என் நினைவிருக்கும் வரை அகலாது நெஞ்சத்தில் நிறைந்து இருக்கும்.

சென்ற வாரம் ஒரு அவசர வேலையாக வாரநாளில் சொந்த ஊர் சென்று வரவேண்டிய கட்டாயம். விடுமுறை இல்லாதக்காரணத்தால் அலுவலகம் முடிந்து கடைசி பேருந்தில் சென்று மறுநாள் காலை முதல் பேருந்திலேயே திரும்புவதாக உத்தேசம். அவ்வாரே இரவு ஒன்பது மணிக்கு அசோக் பிள்ளரில் பேருந்து ஏறினேன். பேர்ணாம்பட்டு செல்லும் பேருந்து அது, நான் அதற்கு முந்தைய ஊரான குடியாத்தத்தில் இறங்க வேண்டும். என்னுடைய அணைத்து வேண்டுதல்களின் மீது சூறை தேங்காயினை உடைத்து நடத்துனர் "வில்லு" படத்தினை போட்டார்.

இரவானதாலும் வேறு பேருந்து வருமாவென்ற ஐயத்தினாலும் விதியினை நொந்தபடி படத்தினை பார்த்துக்கொண்டே சென்றேன். ஆற்காட்டினை நெருங்கும் பொழுது படம் முடிந்தது, கண்களிலிருந்த வழிந்திருந்த துளிகளை துடைத்து தூங்க ஆயத்தமானேன். ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில்தான் அணுகுண்டு போட்டார்கள் அனால் இந்த நடத்துனரோ ஹிரோஷிமாவைத்தொடர்ந்து ஹிரோஷிமாவிலேயே அடுத்த அணுகுண்டினை போடுவதுபோல வில்லுவினையே திரும்பப்போட்டார். நான் அழாதகுறையாக அவரிடம் சென்று வேறு படம் போடும்படி வேண்டினேன். அவரோ ராஜபக்க்ஷேவாக மாறி தன்னிடம் உள்ள ஒரே படம் "வில்லு" என்று கூறி என் அடுத்த கேள்விக்கு தயாரில்லாதவராக நயன்தாராவை நோக்கினார்.
நயன்தாரா அடித்த சரக்கில் எனக்கு போதையேறி பேருந்திலேயே மயங்கி விழுந்தேன்.

குடியாத்தம் வந்ததும் மயக்கம் தெளிந்து வீடுநோக்கி ஓடினேன், விஜய் என்னை நோக்கி விடாது வில்லில் நானேற்றி அம்பினை தொடுத்துக்கொண்டிருந்தார்.

வீட்டினையடையும் போது மணி அதிகாலை இரண்டு. நான்கு மணி முதல் பேருந்தில் சென்னை திரும்ப வேண்டும், வில்லால் கண்ட விழுப்புண்களால் இருந்த இரண்டு மணி நேரத்திலும் உறங்க முடியவில்லை.
தூக்கம் தொலைத்த இரவினை சபித்துக்கொண்டே நான்கு மணிக்கு மீண்டும் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். பேருந்து பேர்ணாம்பட்டிலிருந்து வந்தது, அடித்துப்பிடித்து உள்ளே ஏறினேன். ஏறியவுடன் என்னை எதிர்பார்த்தது போல நயன்தாரா "வாடா மாப்பிளை வாழப்பழ தோப்பிளே.." என்றார், நிலை தடுமாறி திரும்பினால் அதே நடத்துனர். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென காற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தேன்.

Loss of Pay ஆனாலும் பரவாயில்லையென்று அடுத்த பேருந்திற்காக காத்திருக்கத்தொடங்கினேன்....

உங்களுக்கேனும் தெரியுமா "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது"?.

Saturday, May 30, 2009

ரிஸ்க்கெடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி....








Friday, May 08, 2009

படித்ததில் பிடித்தது - 1

லஞ்சம் வாங்கினேன்
கைது செய்தார்கள்
லஞ்சம் கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்