Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, January 26, 2011

எந்திரன் பார்த்த கதை

சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் குல நிறுவனங்களிலிருந்து வெளியிடப்படும் எந்த ஒரு படத்தினையும் என் பணத்தினை செலவு செய்து திரையரங்கிற்கு சென்று பார்பதில்லை என்ற கொள்கையினை எனக்குள் வகுத்துக்கொண்டேன்.

கொள்கைக்கு விடப்பட்ட முதல் சவால் - எந்திரன்.

படம் வெளியாகி ஒரு மாதம் வரை தாக்குபிடித்துவிட்டேன். தங்கமணியின் குடும்பத்தில் அனைவரும் எந்திரனை தரிசித்து பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டிருந்தனர். உறவினர்கள் கூடும் சபையில் பலரும் எந்திரனின் வித்தைகளை சிலாகிக்க அந்த உரையாடல்களில் கலந்துகொள்ள முடியாமல் தங்கமணி தன் தகப்பனாரிடம் மாமனாரிடம் புகார் காண்டம் வாசிக்க, மாமனாரின் வீட்டு முற்றத்தில் நசுங்கிய சொம்பும், நாற்காலியும் கொண்டுவரப்பட்டது .

"கொள்கை" என்ற அகராதியில் இல்லாத வார்த்தைகளை கேட்டு வீடே கொந்தளித்தது. இடது கையினில் டிக்கெட்டினை வைத்தால் மட்டுமே வலது கையிலுள்ள எண்ணை தலையில் தேய்க்கப்படும் என்று முதல் வெடியினை கொளுத்தி தலைதீபாவளி கொண்டாட்டத்தினை தங்கமணி துவங்கிவைத்தாள். பந்தியில் எனக்குமட்டும் சதையில்லாத வெறும் எலும்புகள் வந்து விழுந்தன, மற்றவர்களுக்கு டபுள் ஆம்லெட், எனக்கு மஞ்சள்கரு நீக்கப்பட்ட ஆம்லெட்.

எது நடந்தாலும் கொண்ட கொள்கையினை கைவிடுவதில்லை என்று உறுதிபூண்டேன்.  பல அஸ்திரங்களை தாங்கி நான்  போரிட்டுக்கொண்டிருந்த போது கொள்கையில் சிறு ஓட்டையினை கண்டுபிடித்த மச்சான் - உன் பணத்தினைதானே செலவழிக்கமாட்டாய் - தன் பணத்தினைக்கொண்டு இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிவந்தான். நான் அபிமன்யுவானேன், சக்ராவியூகத்தில்  வீழ்ந்தேன்.