Friday, November 27, 2009

தந்தை மகற்கு ஆற்றும்....

காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக மட்டுமே நான் இதுவரை அறிந்து வந்துள்ளேன். அவருக்கும் பிள்ளைகள் உண்டு, ஒன்றல்ல நான்கு என்பதை இதுவரை எங்கும் கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவில் இல்லை. ஒரு சராசரி தந்தையாக அவரின் செயல் மற்றும் ஆளுமை ஜெயமோகன் அவர்களின் இந்த இரண்டு கட்டுரைகளால் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

http://jeyamohan.in/?p=5013

http://jeyamohan.in/?p=5040

ஆங்காங்கே தமிழின தலைவர் கலைஞரின் பிம்பம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

சற்று பெரிய கட்டுரைகள், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும்.

Monday, November 16, 2009

சென்னை - 2

எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லரிப்பா போச்சு.

நேற்று தான் சென்னையில் என்னுடைய பத்து வருடங்கள் பற்றி ஒரு பதிவினை போட்டு வைத்திருந்தேன், இன்று என் அலுவலகத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.....

இன்றைக்கு அலுவலகத்தில் என்னுடைய அணியில் ஒருவர்(விஜய்) புதியதாக சேர்ந்தார். அவரை எனக்கு அறிமுகபடுத்த HRடீமில் இருந்து அழைத்தார்கள். நானும் சென்றேன். அங்கே இரண்டு புதியவர்களும் HRரும் நின்று கொண்டிருந்தார்கள். புதியவர்களில் ஒருவரை அரைகண்ணால் பார்த்தபடியே HRரிடம் இவர்தானா விஜய் என்று கேட்டேன், அவர்கள் இல்லை மற்றொருவர் என்று கூற நானும் அவரை அழைத்துக்கொண்டு என் இருப்பிடம் வந்துவிட்டேன்.
புதியவருக்கு அலுவலகம் மற்றும் பணிகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன், சற்று தொலைவில் இருந்து என்மேல் இரண்டு கண்கள் ஊறுவதை உணர்ந்து திரும்பி பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன் நான் இவரா விஜய் என்று கேட்ட நபர் என்னையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். ஒரு ஐந்து வினாடிகள் அவரை உற்று பார்த்தவுடன் என் உடம்பில் ஒரு வினாடி மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது. செந்தில் அண்ணன். சென்னையில் கழித்த பத்து வருடங்களில் முதல் மூன்று வருடங்கள் என்னுடைய அறையில் இருந்தவர். இம்மாநகரில் எனக்கு கிடைத்த முதல் சில அறிமுகங்களில் அடங்குபவர்.

எவ்வளவு துன்பங்கள், கடினங்களை எதிர் கொண்டாலும் சிரித்த முகத்துடன் இருப்பவர். பணி நிமித்தமாக பெங்களுருக்கு குடி பெயர்ந்தார், அதன் பிறகு அவருடனான தொடர்பு முற்றிலுமாக அறுபட்டது. பலமுறை நினைத்தும் விடாத முயற்சி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

அதே புன்சிரிப்பு மாறாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்" - அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!

இன்று அவருடன் சென்று குடித்த தேநீர் வழக்கத்தை விட நன்றாக இருப்பதாகப்பட்டது.

2012 - உலகம் அழியுமா?

2012-ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, மனித இனம் விரைவில் அழியப்போவது என்னமோ உண்மை.

http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=117&Itemid=9

பணம் கொண்டு இயற்கையினை வளைக்க முடியாதென்பதை மானுடன் உணரும் வரை ஒன்றும் செய்ய முடியாது.

Sunday, November 15, 2009

சென்னை - 1

நேற்று நடந்தது போல் இருக்கிறது. 08th Aug'1999, மின்னணு பொறியியல் படிப்பதற்காக பிறந்து வளர்ந்த ஊரை விட்டு சென்னை வந்து 50 லட்ச மக்கள் வெள்ளத்தில் கலந்து கரைந்த தினம். பத்து வருடங்கள் ஓடி விட்டன.

வழியனுப்ப வாசல் வரை வந்த பாட்டி, அம்மா, சித்தப்பா, சித்தி, அக்கா அனைவரையும் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டேன். வீட்டில் ஏற்கனவே அக்காவும், அண்ணனும் வெளியூர் சென்று விடுதியில் தங்கி படித்து வருகின்றனர், அப்படி செல்லும் போது அவர்கள் யாரும் அழுதது இல்லை. சென்னை வெறும் ஐந்து மணி நேர பயணமென்பதாலும், என் அத்தை அங்கே வசிப்பதாலும், தந்தை தொழில்ரீதியாக பல வருடங்களாக வாரமொருமுறை சென்னை விஜயம் செய்தவராததாலும் யாருக்கும் நான் சென்னை செல்வது குறித்து அவ்வளவாக பயமில்லை. எனக்கோ மிரட்சியாக இருந்தது, மதியம் சாப்பிட்ட பிரியாணி செரிக்காமல் தொண்டைவரை வந்து வந்து சென்றுகொண்டிருந்தது.

என் அழுகையினை எதிர்பார்க்காத அனைவரும் சிரித்துவிட்டனர். ஏன் அழுதேன் என்று இப்போது நினைத்து பார்த்தால் எனக்கும் சிரிப்புதான் வருகிறது.

சைதாப்பேட்டை - சென்னையின் வளைவு சுழிவுகளை எனக்கு கற்று கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கின்ற இடம். பத்து வருடங்களில் எட்டு வருடங்களை இங்கே தான் கழித்தேன். ஒத்தையடி பாதை போல சுருக்கப்பட்ட தெருக்கள், அவற்றிலிருந்து கிளைபரப்பும் சந்துக்கள், தெருவிற்கு தெரு உள்ள கோவில்கள், Boat Club, அண்ணா நகர், பெசன்ட் நகர், அடையார் போன்று தனவாங்கள் மட்டுமே வாழும் இடமாக அல்லாமல் வறுமை கோட்டிற்கு மேலும், கீழும், மீதும் பயணம் செய்யும் அத்தனை மக்களையும் கொண்ட அழகிய அசுத்த இடம்.

இந்த பத்து வருடங்களில் சென்னையில் எனக்கு பிடித்த இடங்கள், மக்கள், உணவு விடுதிகள் மற்றும் சிலவற்றை பதிவு செய்யத்தோன்றியது. அதற்கு என் படித்துறையை விட வேறு நல்ல இடமேது?.

வரும் நாட்களில் அதனை செய்யலாமென்று உத்தேசித்துள்ளேன்....

சச்சின் மட்டும் தான் 20 வருடங்கள் கொண்டாடுவாரா??? நாங்களும் தான்...

Monday, November 09, 2009

கூட்டாஞ்சோறு - 09/11/09


வெள்ளந்தி மனசு
என் தந்தை பால் வியாபாரம் செய்து வருகிறார். குடியாத்தத்திற்கு அருகிலுள்ள கிராமங்களிற்கு சென்று விவசாயிகளின் பசுக்களில் பால் கறந்துவர 4/5 பணியாட்கள் இருப்பார்கள். அதில் ஒருவரின் பணி காலையிலும் மாலையிலும் மணிக்கொரு முறை சென்று அந்நேரத்தில் அவர்களிடம் உள்ள பாலினை சேகரித்து வருவது. என்னுடைய பள்ளி நாட்களில் வேலையாட்கள் யாரவது விடுமுறையில் சென்றால் நானோ அல்லது என் அண்ணன்னோ பாலினை சேகரித்து வர செல்வோம். அப்படி ஒருமுறை செல்கையில், மூங்கில்பட்டு கிராமத்தில் ஒரு வரப்பு ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்து குபேந்திரன்(பணியாள்) பால் கறந்துவர காத்திருந்தேன், என்னருகில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வந்து அமர்ந்து உள்ளூர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையில் கரும்பு சோகை கட்டும், இடுப்பில் வெட்டரிவாளும் கொண்டு எங்களை கடந்து சென்றாள். வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தவர்களை கண்ட அவர் அந்த இருவரில் ஒருவரைப்பார்த்து உரக்கச்சொன்னார்:

என்ன, மருமவ புள்ள இப்படி வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தா, உன்னைய நம்பி எப்பிடி எம்பொண்ண குடுக்கறது?

மொதல்ல நீ பொண்ண பெத்துப்போடு அப்புறம் பாரு நான் எப்படி துட்டு சேக்குறேன்னு..

உன்னைய நம்பி நான் பொண்ண வேற பெத்து போடனுமாக்கும், போய் பொழப்ப பாரு மொதல்ல..

இவ்வாறு சொல்லிக்கொண்டே அந்தப்பெண் சென்றுவிட்டார், இருவரும் தங்கள் பேச்சினை தொடர்ந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அந்தப்பெண் பதில் கூறிய இளைஞசனின் தெருவில் வசிப்பவர், மேட்டு ரவியின் மனைவி என்று தெரிந்தது.

ஏனென்று தெரியவில்லை, அந்த சம்பாஷனை நடந்து பல வருடங்கள் ஆகியும் என் நினைவில் அப்படியே படிந்துள்ளது.

கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனசினை இந்த சம்பவத்தில் நாம் சிறிது தெரிந்து கொள்ளலாம். தான் வாழ வந்த ஊரில் ஒருவன் வெட்டியாய் இருப்பதை பார்த்து தனக்கென்ன என்று போகாமல் உரிமையுடனும், நாசுக்க்காகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லிய வார்த்தைகள் சென்னை போன்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கைவருமா அல்லது இவ்வாறு பிறர் தடம் மாறும்போது உரிமை கொண்டு சொல்வார்களா என்பது சந்தேகமே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நகரம்
நான் இதுவரை படித்திருக்கும் சில பத்து புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்". இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில் உள்ள பல கதைகளை நான் திரும்ப திரும்ப பலமுறை படித்துள்ளேன். அதில் ஒரு கதை "நகரம்".

மூனாண்டிப்பட்டியினை சேர்ந்த வள்ளியம்மாள் தன்னுடைய மகள் பாப்பாத்தியினை கிராம பிரைமரி ஹெல்த் சென்டர் டாக்டரின் அறிவுரைப்படி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும், மருத்துவ வாடைகளும் அதனால் ஏற்படும் விளைவுமே கதை.

என்னை இதுவரை பாதித்த கதைகளுள் முக்கியமான ஒன்று இது.

உங்களிடம் பதினைந்து நிமிடங்களும், கதை படிக்கும் மனநிலையும் இருந்தால் இந்த link'ல் சென்று கண்டிப்பாக படிக்கவும்:

http://www.scribd.com/doc/2582483/sujatha
-