Showing posts with label கூட்டாஞ்சோறு. Show all posts
Showing posts with label கூட்டாஞ்சோறு. Show all posts

Thursday, February 25, 2010

Testophobia

Greenpeace India - IT துறையில் வேலை செய்யும் சிலபலர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். மாதம்தோறும் குறைந்தபட்சமாக ரூ.250 ஐ தங்களுடைய வங்கிகணக்கில் அவர்களாகவே எடுத்துக்கொள்ள பட்டயம் எழுதி கொடுத்துள்ளனர். கேட்டால், உலகின் பசுமையினை பாதுகாக்க தம்மால் இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு சென்று ஏதும் செய்ய இயலாது, எனவே அவ்வாறு செய்பவர்களை ஊக்குவிக்கின்றோம் என்கிறார்கள். இப்படி canteen வாசலில்  ஜீன்ஸ், டீ-ஷர்ட் 'சல்லி'களிடம் (உபயம்: செல்வேந்திரன்) எழுதி கொடுத்துவிட்டு இவர்கள் நேரே செல்வது விளைநிலத்தை வறுமையின் துணைகொண்டு வாங்கி/அபகரித்து கூறு போட்டு கான்கிரீட் மரம் நட அழைக்கும்  rea(e)l-estate நிறுவனங்களிடம். 

*********

ள்ளி முதல் கல்லூரி வரை செக்குமாடு போல தேர்வினை மட்டுமே இலக்காக கொண்டு ஓடியவன் நான். சமீபகாலமாக எந்தவொரு கால நிர்ணயமும், இலக்கும் இல்லாமல் மனதிற்கு பிடித்த தொழில் சாராத, சார்ந்த புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுகங்களை உணர்ந்தபின்  தேர்வு என்ற இல்லக்கினை மட்டுமே கொண்டு அக்கம் பக்கம் பாராமல் எழுத்துக்களை விழுங்குவது கடினமாக உள்ளது. தேர்வு என்ற சொல்லே ஒருவித அயர்ச்சியினை தருகிறது. அநேகமாக testophobia'வால் பாதிக்கப்பட்டுளேன் என்று நினைக்கின்றேன்.

Monday, November 09, 2009

கூட்டாஞ்சோறு - 09/11/09


வெள்ளந்தி மனசு
என் தந்தை பால் வியாபாரம் செய்து வருகிறார். குடியாத்தத்திற்கு அருகிலுள்ள கிராமங்களிற்கு சென்று விவசாயிகளின் பசுக்களில் பால் கறந்துவர 4/5 பணியாட்கள் இருப்பார்கள். அதில் ஒருவரின் பணி காலையிலும் மாலையிலும் மணிக்கொரு முறை சென்று அந்நேரத்தில் அவர்களிடம் உள்ள பாலினை சேகரித்து வருவது. என்னுடைய பள்ளி நாட்களில் வேலையாட்கள் யாரவது விடுமுறையில் சென்றால் நானோ அல்லது என் அண்ணன்னோ பாலினை சேகரித்து வர செல்வோம். அப்படி ஒருமுறை செல்கையில், மூங்கில்பட்டு கிராமத்தில் ஒரு வரப்பு ஓரத்தில் இருந்த திட்டில் அமர்ந்து குபேந்திரன்(பணியாள்) பால் கறந்துவர காத்திருந்தேன், என்னருகில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வந்து அமர்ந்து உள்ளூர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையில் கரும்பு சோகை கட்டும், இடுப்பில் வெட்டரிவாளும் கொண்டு எங்களை கடந்து சென்றாள். வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தவர்களை கண்ட அவர் அந்த இருவரில் ஒருவரைப்பார்த்து உரக்கச்சொன்னார்:

என்ன, மருமவ புள்ள இப்படி வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தா, உன்னைய நம்பி எப்பிடி எம்பொண்ண குடுக்கறது?

மொதல்ல நீ பொண்ண பெத்துப்போடு அப்புறம் பாரு நான் எப்படி துட்டு சேக்குறேன்னு..

உன்னைய நம்பி நான் பொண்ண வேற பெத்து போடனுமாக்கும், போய் பொழப்ப பாரு மொதல்ல..

இவ்வாறு சொல்லிக்கொண்டே அந்தப்பெண் சென்றுவிட்டார், இருவரும் தங்கள் பேச்சினை தொடர்ந்தனர். அவர்கள் பேச்சிலிருந்து அந்தப்பெண் பதில் கூறிய இளைஞசனின் தெருவில் வசிப்பவர், மேட்டு ரவியின் மனைவி என்று தெரிந்தது.

ஏனென்று தெரியவில்லை, அந்த சம்பாஷனை நடந்து பல வருடங்கள் ஆகியும் என் நினைவில் அப்படியே படிந்துள்ளது.

கிராமத்து மக்களின் வெள்ளந்தி மனசினை இந்த சம்பவத்தில் நாம் சிறிது தெரிந்து கொள்ளலாம். தான் வாழ வந்த ஊரில் ஒருவன் வெட்டியாய் இருப்பதை பார்த்து தனக்கென்ன என்று போகாமல் உரிமையுடனும், நாசுக்க்காகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லிய வார்த்தைகள் சென்னை போன்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கைவருமா அல்லது இவ்வாறு பிறர் தடம் மாறும்போது உரிமை கொண்டு சொல்வார்களா என்பது சந்தேகமே...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நகரம்
நான் இதுவரை படித்திருக்கும் சில பத்து புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று "சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்". இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த புத்தகத்தில் உள்ள பல கதைகளை நான் திரும்ப திரும்ப பலமுறை படித்துள்ளேன். அதில் ஒரு கதை "நகரம்".

மூனாண்டிப்பட்டியினை சேர்ந்த வள்ளியம்மாள் தன்னுடைய மகள் பாப்பாத்தியினை கிராம பிரைமரி ஹெல்த் சென்டர் டாக்டரின் அறிவுரைப்படி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறாள். அங்கு அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளும், மருத்துவ வாடைகளும் அதனால் ஏற்படும் விளைவுமே கதை.

என்னை இதுவரை பாதித்த கதைகளுள் முக்கியமான ஒன்று இது.

உங்களிடம் பதினைந்து நிமிடங்களும், கதை படிக்கும் மனநிலையும் இருந்தால் இந்த link'ல் சென்று கண்டிப்பாக படிக்கவும்:

http://www.scribd.com/doc/2582483/sujatha
-